நிலக்கரி ஊழல் வழக்கு- சிறப்பு அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்க கோபால் சுப்பிரமணியம் மறுப்பு!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேரை நீதிபதிகள் நியமனக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் கோபால் சுப்ரமணியத்தை மட்டும் நிராகரித்துவிட்டு மற்ற 3 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த கோபால் சுப்பிரமணியம் , தனது பெயரை பரிந்துரைப் பட்டியலில் இருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் வழக்குகளில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க திட்டமிடப்பட்டது.
அதற்கு பொருத்தமானவராக கோபால் சுப்பிரமணியம் இருப்பார் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்தார். அவரை நியமிப்பதில் வழக்கறிஞர்கள் இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கோபால் சுப்ரமணியத்தை நியமிக்க வழக்கறிஞர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, நிலக்கரி ஊழல் வழக்கை தொடர்ந்த எம்.எல்.சர்மா அதற்கான முயற்சியில் இறங்கினார்.
இதுதொடர்பாக அவர் தொடர்பு கொண்டு பேசியபோது, நிலக்கரி ஊழல் வழக்கில் பொறுப்பேற்க கோபால் சுப்பிரமணியம் விரும்ப வில்லை என்று அவரது அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேறு வழக்கறிஞரை நியமிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.