குஜராத் தேர்தலுக்கு ரெடியாகும் ”பாஜக”.. மாணவிகளை கட்சியில் சேர வற்புறுத்திய கல்லூரி முதல்வர்
அகமதாபாத்: குஜராத்தில் கல்லூரி மாணவிகள் அனைவரும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வேண்டும் என கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் அமைந்துள்ளது காந்தி பெண்கள் கலை மற்றும் வணிகவியல் கல்லூரி.
ஏராளமான மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரியின் முதல்வராக ரஞ்சன்பாலா கோஹில் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
எய்ம்ஸ் செங்கல்லை திருடிட்டாரு.. உதயநிதியை கைது பண்ணுங்க முதல்ல.. போலீஸில் புகார் அளித்த பாஜக!
கல்லூரி முதல்வர் நோட்டீஸ்
இந்த நிலையில், ரஞ்சன்பாலா கோஹில் கல்லூரி மாணவிகளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், பாவ்நகர் தொகுதி எல்லைக்கு உட்பட்ட கல்லூரி மாணவிகள் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் ஏஜெண்டுகளாக பணியாற்ற பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் செல்போன்களை எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.
பாஜகவில் சேர வேண்டும்
பாவ்நகர் தொகுதிக்கு உட்பட்ட மாணவிகள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என குறிப்பிட்டுள்ள கல்லூரி முதல்வர், இதற்காக நீங்கள் பாஜகவில் சேர வேண்டும் என்பதால் செல்போன் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். கல்லூரி முதல்வரின் இந்த கடிதம் மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர் இயக்கங்கள் தங்கள் கண்டங்களை தெரிவித்து வந்தனர்.
அரசியலில் ஈடுபடக்கூடாது
இதுகுறித்து கல்லூரி நிர்வாகி திரென் வைஷ்ணவ் தெரிவிக்கையில், "இந்த நோட்டீஸ் ஞாயிறு இரவுதான் என் கவனத்துக்கு வந்தது. உடனே நான் கோஹிலை தொடர்புகொண்டேன். 'பாவ்நகர் ஸ்ரீ கெலவாணி மண்டல் அறக்கட்டளையின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களும், கல்வி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அரசியல் பணிகளில் ஈடுபடக்கூடாது.' என்று உத்தரவிட்டுள்ளேன்.
பதவி விலகிய முதல்வர்
கல்லூரி முதல்வர் தனது தவறை உணர்ந்துவிட்டார். மாணவிகள் பாஜகவில் இணைவதில் தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அவரை நீக்க வேண்டும் என்று வெளியிலும், உள்ளேயும் அழுத்தங்கள் ஏதும் எங்களுக்கு வரவில்லை. தவறை உணர்ந்து அவரே விலகுவதாக கூறியுள்ளார்." என்றார். குஜராத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.