தோல்வியை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் மோடி அலை நிச்சயம் இல்லை.. காங்கிரஸ்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் மோடி அலை வீசவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காஷ்மீரில் 3வது இடத்தைப் பெற்றுள்ள காங்கிரஸ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4வது இடத்திற்குப் போய் விட்டது.
தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறுகையில், தேர்தல் முடிவு ஏமாற்றம் தருகிறது. எங்களது தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதேசமயம், இந்த தேர்தலில் மோடி அலை வீசவில்லை என்பதும் உண்மை.
ஜம்மு காஷ்மீரில் 44 இடங்களுக்கு பாஜக குறி வைத்தது. ஆனால் அதில் பாதி அளவில்தான் அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. அதேசமயம், கடந்த 2000ம் ஆண்டு இருந்த இடத்திலேயே தற்போதும் காங்கிரஸ் உள்ளது. எனவே மோடி அலை இந்த தேர்தலில் நிச்சயம் வீசவில்லை. பெரிதுபடுத்தி பேசி வந்த பாஜகவினர் இதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார் ஜா.
இதற்கிடையே, காஷ்மீரில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜார்க்கண்ட்டைப் போலவே, காஷ்மீரிலும் பாஜக ஆட்சி அமையும் என்று அவர் கூறியுள்ளார்.