லோக்சபா தேர்தல்... தமிழகம் உள்பட நாடு முழுவதும் வேட்பாளர் தேர்வுக்கான காங். குழுக்கள் அறிவிப்பு
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான குழுக்களை கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி நேற்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், உறுப்பினராக சுபாங்கர் சர்கார், மாநிலப் பொறுப்பாளரும், பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே. கோபிநாத் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் குலாம் நபி ஆசாத் தலைவராகவும், சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் பிரதேச கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் வி.வைத்திலிங்கம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கும் குலாம் நபி ஆசாத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.சி. சாக்கோ
டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கும் காங்கிரஸ் மூத்த எம்.பி., பி.சி.சாக்கோ தலைவராகவும் தீபக் பபாரியா, ஷகீல் அகமது ஆகியோர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஹாரூண் யூசுஃப் ஆகியோரும் தேர்வுக் குழுவிம் இடம்பெற்றுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு 'நாசா', சின்னா
அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநில காங்கிரஸ் தேர்வுக் குழுவுக்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை தலைவராகவும், ஆந்திரத்தை சேர்ந்த ஜி. சின்னா ரெட்டி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுஷில்குமார் ஷிண்டே, மாணிக்கம் தாகூர்
அஸ்ஸாம், அந்தமான் நிகோபார், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்வுக் குழுக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைவராகவும், தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பவன்குமார் பன்சால்
ஊழல் புகாரில் சிக்கி அமைச்சர் பதவியை ராஜினமா செய்த பவன்குமார் பன்சால், குஜராத், ராஜஸ்தான், தாதர் நாகர் ஹைவேலி மற்றும் டாமன், டையூ மாநில வேட்பாளர் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மும்பைக்கு மல்லிகார்ஜூன கார்கேவும், ஆந்திரா, கோவா, கர்நாடகாவுக்கு வயலார் ரவியும் வேட்பாளர் தேர்வுக் குழு தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் பெர்னாண்டஸ்
ஒடிஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களின் வேட்பாளர் தேர்வுக் குழு தலைவராக ஆஸ்கர் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.