”ட்விட்டரில் இருக்காங்க.. ஆனால் களத்தில் இல்லையே” காங்கிரஸ் வம்புக்கு இழுக்கும் குலாம்நபி ஆசாத்!
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்று மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதனால் ஜி23 தலைவர்கள் என்ற அழைக்கப்பட்ட தலைவர்களில், குலாம் நபி ஆசாத் முதன்மையானவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த தலைவராகவும், பாஜகவோடு நெருக்கம் காட்டும் தலைவராகவும் குலாம் நபி ஆசாத் அறியப்பட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். அதோடு, காங்கிரஸ் கட்சியின் பேரழிவுக்கு காரணம் ராகுல் காந்தி தான் என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, குலாம் நபி ஆசாத் பின் அணிவகுத்தனர்.
‛‛டெட்லைன்’’ நவம்பர் வரை தான்..ராஜினாமா செய்யும் காங்கிரஸ் தலைவர்கள்.. கொளுத்திப்போட்ட சி.டி. ரவி
ஸ்ரீநகரில் பொதுக்கூட்டம்
இதனைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று ஸ்ரீநகரில் குலாம் நபி ஆசாத் தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர், குலாம் நபி ஆசாத்திற்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
குலாம் நபி ஆசாத் பேச்சு
இதனைத்தொடர்ந்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், எனது கட்சிக்கான பெயரையும் கொடியையும் மக்களே தீர்மானிப்பார்கள். நான் எப்போதும் ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் தான் இருக்கிறேன். நான் இப்போது முதலமைச்சரோ, அமைச்சரோ அல்ல. சாதாரண மனிதனாக உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு ஆதரவாக பலரும் இங்கு வருகின்றனர்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாநிலக் கட்சிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் ஆதரவாக கட்சியில் இணைகின்றனர். இன்னும் ஏராளமானோர் நிச்சயம் வருவார்கள். காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. இரத்தம் சிந்தி காங்கிரஸ் கட்சியை நாங்கள் வலுப்படுத்தினோம். இணையம் மூலமோ ட்விட்டர் மூலமோ காங்கிரஸ் கட்சி வலுவடையவில்லை.
என் கவனம்
எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர். ஆனால், ட்விட்டரை கடந்து அவர்களால் வர முடியவில்லை. காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியாததற்கு இதுவே காரணம். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் எனது கட்சி கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.