ராகுல் பாச்சா பலிக்கவில்லை, மேடம் நீங்களே முன்னாடி வாங்க: அழைக்கும் காங். தலைவர்கள்
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் பழையபடி முன்னிலை வகிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை தனது மகனும், கட்சியின் துணை தலைவருமான ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டார். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் வேலைகளை ராகுல் காந்தி தான் முன்நின்று கவனித்து வருகிறார்.
அவரது தலைமையிலான தேர்தல் வேலைகள் பலன் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
சோனியா
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார வேலையை முன் நின்று நடத்துமாறு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியை கேட்டுள்ளனர். சோனியா இல்லாதது தான் தற்போது தேர்தல் வேலைகள் சூடுபிடிக்கவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பாஸ்வான்
லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காங்கிரஸ் கூட்டணியில் சேர கிடையாய் கிடந்தார். அவர் சோனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சோனியா பாஸ்வானின் மகன் சிராகை ராகுல் காந்தியை சந்தித்து ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு கூறினார். ஆனால் ஒப்பந்தமே நடக்காமல் போய்விட்டது. பாஸ்வான் பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டார்.
திமுக
தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நினைத்ததால் தான் அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ராகுல் கருணாநிதியை சந்தித்து பேசியதே இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டணி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலமாக உள்ளவர் சோனியா. எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சோனியாவை நன்கு தெரியும். அவருடன் கூட்டணி கட்சிகளும் வளர்ந்தன என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னிலை
தேர்தல் வேலைகளில் ஒன்றும் சரியில்லாததால் அவற்றை சரி செய்யும் வேலையில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். அவர் மீண்டும் பேரணிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.