இமாச்சலில் முந்திய காங்கிரஸ்.. எம்எல்ஏக்களை பாஜக இழுத்தால் என்ன செய்வது? ஆரம்பித்த ரிசார்ட் அரசியல்
ஷிம்லா: இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. இதற்கிடையே, பாஜகவின் வலையில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதால் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது.
இமாசல பிரதேச சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாகூர் உள்ளார்.
6 முறை ஜெயிச்சும் காங்கிரஸ் சாதனையை முறியடிக்காத பாஜக.. இப்பவும்
37 ஆண்டு வரலாறு
இமாசல பிரதேசத்தில் கடந்த 1985- ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாக வரலாறு இல்லை. ஆளும் கட்சி தோற்பது எதிர்க்கட்சி வெற்றி பெறுவது என்ற நிலையே கடந்த 37 ஆண்டுகளாக உள்ளது. இதனால், இந்த முறை இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலும் பெரும் கவனம் பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக ஆட்சி அமைந்துவிடும் என்று கூறின.
பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதாவது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 வென்றால் போதும் என்ற நிலை இருக்க காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்
பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால், தற்போதைய சூழல் படி பார்த்தால் பாஜக ஆட்சியை பறிகொடுப்பது உறுதியாகியிருக்கிறது. இருந்தாலும் தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்கிவிடும் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதா தனது வழக்கமான ஆபரேஷன் லோட்டஸ்- ஐ கையில் எடுக்கும் முயற்சிக்கும் அதை முறியடிக்கும் வகையில் வியூகங்களை வகுக்கத்தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்
எம்.எல்.ஏக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்து செல்ல
வெற்றி முகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் இமாசல பிரதேச காங்கிரஸ் தலைவர் பதிபா சிங் இல்லத்திற்கு வருகை தர தொடங்கியிருக்கிறார்கள். வெற்றி சான்றிதழ்களை வாங்கியவுடன் கங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
தீவிரமாக கண்காணிக்கும் பிரியங்கா காந்தி
இதற்கான டாஸ்க் சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தானுக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படலாம் என்றும் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனிப்பட்ட முறையில் இதை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்
இது குறித்து சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த பூபேஷ் பகேல், கட்சி மேலிடத்தின் மேற்பார்வையாளராக நான் நியமிக்கப்பட்டு இருப்பதால் நான் இமாசல பிரதேசம் செல்ல இருக்கிறேன். எம்.எல்.ஏக்களை இங்கு அழைத்து வரப்போவது இல்லை. ஆனால் எங்கள் எம்.எல்.ஏக்கள் ஒன்றாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். பாஜக எந்த எல்லைக்கும் செல்லகூடியது" என்றார்.