பசு வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு.. ராஜ்நாத்சிங் பதிலால் லோக்சபாவில் காங். வெளிநடப்பு
பசு கும்பல் வன்முறை பற்றி ராஜ்நாத் சிங்கின் பதிலில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video

டெல்லி: பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் கும்பல் வன்முறை கொலைகள் குறித்து காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதில் அதிருப்தி அளிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
லோக்சபாவில் இன்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் கட்சி எம்பிகள், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் வன்முறை, கொலைகள் குறித்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதில் ஏன் இன்னும் ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பியதோடு மத்திய அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கும்பல் வன்முறையைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

காங்கிரஸ் எம்பிகளின் கேள்விக்கு பதிலளித்த, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
நாட்டின் பல பகுதிகளில் கும்பல் வன்முறை நடைபெறுவதாகவும், அதனால், கொலைகள் நடப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் இது போன்ற சம்பங்களுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், பெரும்பாலான சம்பவங்களில் உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளே காரணமாக உள்ளன என்றும் பொதுமக்கள் பிரச்சனை என்பது மாநிலங்களின் விஷயம் என்று கூறினார். அதோடு, உள்துறை அமைச்சகம் 2016 ஆம் ஆண்டிலும், 2018 ஆம் ஆண்டிலும் மாநிலங்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக சமூக ஊடகங்கள் சேவையை வழங்குபவர்களிடம் அவர்களுடைய தளத்தில் பொய் செய்திகளைப் பற்றி சோதனை செய்ய கேட்டிருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் துரதிருஷ்டமானவை. இந்த தாக்குதலில் கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நான் தனிப்பட்ட முறையில் முதல்வருடன் பேசியிருக்கிறேன்" என்று ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்பிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications