பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு பாதிப்புதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு பாதிப்புதான் அதிகம் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறிய மோடி கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கை என்றார்.
இதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 99.3 சதவீத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஆனால் இதற்காக அரசு அதிக செலவு செய்திருப்பதாகவும் ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்பாரா?
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, 2017ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் 3 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் நாட்டிற்கு திரும்பும் என பிரதமர் மோடி கூறினார். அந்த பொய்க்காக பிரதமர் மோடி தற்போது மன்னிப்பு கேட்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பேரழிவை ஏற்படுத்திவிட்டதாக ஆர்பிஐ மீண்டும் நிரூபித்துவிட்டதாகவும் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

15.31 லட்சம் கோடி திரும்பியுள்ளது
ஆர்பிஐயின் அறிக்கையில் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் பணமதிப்பிழப்பிற்கு உள்ளாக்கப்பட்டதில், ரூ.15.31 லட்சம் கோடி மட்டுமே திரும்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications