சொத்து விபரங்களை தர மறுக்கும் குஜராத் முதல்வர், அமைச்சர்கள்- சட்ட அவமதிப்பு என்கிறது காங்.
அகமதாபாத்: முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களின் சொத்து விபரத்தை வெளியிட மறுப்பதன் மூலம் குஜராத் அரசு சட்டத்தை அவமதித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமராவதற்கு முன்னதாக குஜராத் முதல்வராக பதவியில் இருந்தார் நரேந்திர மோடி. இந்நிலையில், சமீபத்தில் குஜராத் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விபரத்தை வெளியிடக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், அதற்கான உரிய விபரங்களை அரசு தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், இந்த விபரங்கள் மக்களுக்கு அவசியமற்றது எனக் கூறி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அவமதிக்கும் செயல். பாஜகவின் உண்மையான முகம் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. விமர்சனங்களைச் சந்திக்கப் பயப்படுகிறார் மோடி என காங்கிரஸ் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான உரிய தண்டனையையும் பாஜக அரசு எதிர்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.