1951 முதல்... இது காங்கிரஸ் 'தள்ளாடி' நடந்து வந்த தேர்தல் பாதை...
சென்னை: நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி தமக்கென கணிசமான வாக்கு வங்கியுடன் செல்வாக்கு செலுத்தியபடிதான் இருக்கிறது. ஊடகங்கள் கணிக்கின்றபடி படுதோல்வியை சந்திக்குமா? அல்லது கடந்த கால தேர்தல் யதார்த்தங்களின்படி முன்னேறிச் செல்லுமா என்பதை நாளைய தேர்தல் முடிவுகள் சொல்லக் காத்திருக்கின்றன.
நாட்டின் முதலாவது பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் 364 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. அதன் வாக்கு சதவீதம் 44.99%.
2வது பொதுத்தேர்தல் 1957ல் நடைபெற்றது. அதில் 371 இடங்களை காங்கிரஸ் வென்றது. வாக்கு சதவீதம் 47.7.8% ஆக அதிகரித்தது.
1962ல் 361
பின்னர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற 3வது பொதுத்தேர்தலில் 361 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். ஆனால் அதன் வாக்கு சதவீதம் 44.72% என சரிந்தது.
1967-ல் சரிவு
முந்தைய 3 தேர்தல்களை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி சரிவை சந்தித்தத தேர்தல் இது. மொத்தம் 283 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் மொத்தம் 78 இடங்களை காங்கிரஸ் இழந்தது. அதன் வாக்கு சதவீதமும் 40.78% என்றானது.
1971ல் உயர்வு
ஆனால் 1971ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அப்படியே உயிர்பெற்று எழுந்தது போல 352 இடங்களை காங்கிரஸ் கபளீகரம் செய்தது. வாக்கு சதவீதமும் 43.68% ஆனது.
1977ல் படுதோல்வி
அவசர நிலை பிரகடனத்துக்குப் பின்னர் நடைபெற்ற 6வது லோக்சபா தேர்தல் 1977ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் 153 இடங்களைத்தான் காங்கிரஸ் பெற முடிந்தது. அதன் வாக்கு சதவீதம் பெரும் சரிவை சந்தித்தது. 34.52% என்றானது காங்கிரஸின் வாக்கு சதவீதம்.
1980ல் விஸ்வரூபம்
அதளபாதாளத்துக்குப் போன காங்கிரஸ் பெரும் விஸ்வரூபமெடுத்தது 1980 தேர்தலில்தான்.. 351 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வாக்கு சதவீதமும் 42.69% ஆனது.
1984ல் இந்திரா அலை
ஆனால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் 1984ஆம் ஆண்டு நாடு தேர்தலை எதிர்கொண்டது. இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல் பேரலை.. பெரும் சுனாமி. மொத்தம் 543 இடங்களில் காங்கிரஸ் கட்சி 415 இடங்களைக் கைப்பற்றியது. ராஜிவ் காந்தி பிரதமரானார். முதல் முறையாக காங்கிரஸின் வாக்கு சதவீதம் 49.01%ஆக அதிகரித்தது. அதன் பின்னர் காங்கிரஸுக்கு பெரும் சரிவுதான்.
1989ல் தோல்வி
1989ஆம் ஆண்டு வி.பி.சிங் சுனாமியால் தேர்தல் உருவானது. அத்தேர்தலில் 197 இடங்களைத்தான் காங்கிரசால் வெல்ல முடிந்தது. வாக்கு சதவீதம் 39.53%. ஆனால் 85 இடங்களைப் பெற்ற பாஜக தயவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு ஆட்சி நடத்தின. அது கவிழ்ந்தது. பின்னர் 64 எம்.பிக்களைக் கொண்ட சந்திரசேகரை ராஜிவ் காந்தி ஆதரித்துப் பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. தேர்தல்தான் வந்தது.
1991ல் ராஜிவ் அலை
1991ஆம் ஆண்டு தேர்தலின் போது ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அது தேர்தலில் பெருமளவு எதிரொலித்தது. ஆனால் இந்திரா படுகொலை அலையில் பாதி அளவுதான் காங்கிரஸுக்கு கிடைத்தது. மொத்தம் 244 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸின் வாக்கு சதவீதம் முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் 35.66% என்றானது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தேர்தலில் 140, 98ஆம் ஆண்டு தேர்தலில் 141, 114 இடங்களைத்தான் கைப்பற்றியது காங்கிரஸ்
2009ல் விஸ்வரூபம்
ஆனால் 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 206 இடங்களைப் பெற்று விஸ்வரூபம் காட்டியது. அதன் வாக்கு சதவீதமும் 28.55%ஆக அதிகரித்தது.
2014ல்?
ஊடகங்கள் கணிக்கின்றபடி காங்கிரஸ் டபுள் டிஜிட்டுக்குப் போகப் போகிறதா? 230-240 என முன்னேறப் போகிறதா என்பது நாளை தெரிந்து விடும்.