ம.பி.யில் என்னை 25 ஆயிரம் கொசுக்கள் கடித்தன..: ராகுல் பேச்சு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப் பயணம் செய்த போது 25 ஆயிரம் கொசுக்கள் தம்மை கடித்தன.. அந்த அளவுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இந்நிலைமையை மாற்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அமைக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சாகரில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய பிரதேசத்தில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக பிரசாரம் செய்தது. ஆனால் யாருமே பயனடையவில்லை.
பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தைவிட காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிக சாலைகள் அமைக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிதான் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டு வந்தது. ஏழை மக்களுக்கான உணவு, உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகிய இரண்டுக்குமே காங்கிரஸ் முன்னுரிமை கொடுக்கிறது.
2009ஆம் ஆண்டு இந்த பகுதியில் நான் சுற்றுப் பயணம் செய்தேன். என்னை 25 ஆயிரம் கொசுக்கள் கடித்தன. கிராமங்களில் கிடைத்த குடிநீரை குடித்ததால் வயிறு உபாதை ஏற்பட்டது. மத்திய அரசு எவ்வளவுதான் நிதி ஒதுக்கினாலும் மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு அதனை பயன்படுத்துவதில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் என்பது ஏசி அறையில் வாழ்வோருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமானது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கான அரசியலையே மேற்கொள்கிறது.
இந்தியாவின் வர்த்தக தலைநகராக இந்தூர்
பின்னர் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
பாரதிய ஜனதாவை விட சாலைகளை, ரயில்பாதைகளை, விமானநிலையங்களை அதிகம் அமைத்தது காங்கிரஸ் கட்சிதான். மும்பை, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களை கட்டமைத்ததும் காங்கிரஸ்தான்.
இந்தூரை இந்தியாவின் வர்த்தக தலைநகராக நாங்கள் மாற்றுவோம்..நிச்சயம் ஒருநாள் நாட்டின் வர்த்தக தலைநகராக இந்தூரும் உருவாகும். இங்குள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வேண்டுமெனில் இப்போதைய அரசு அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் அனைத்தும் சாத்தியம்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரத்தை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் மக்களைப் பிரிக்கும் அரசியலையே செய்கிறது.
அவர்களைப் பொறுத்தவரை மக்கள் அடித்துக் கொள்ளட்டும்.. நமக்கு வாக்குகள்தான் முக்கியம் என்பதுதான் கொள்கை. முசாபர்நகர் கலவரத்தை முன்வைத்து அங்கே பாகிஸ்தான் உளவு அமைப்பு தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர்களே வேண்டாம் என்று சொன்னவர்கள். கம்ப்யூட்டரை பயன்படுத்தினால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று சொன்னவர்கள்.. என்னைப் பொறுத்தவரை என் தந்தை ராஜிவ்தான் ஹீரோ. அவர் 40 வயதில் நாட்டின் பிரதமரானார்.
நலத்திட்டங்கள் மக்களை சென்றடையக் கூடாது என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. காங்கிரஸோ மக்களுக்கான உணவு பாதுகாப்பு மசோதா, தகவல் அறியும் உரிமை சட்டம், நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றினோம் என்றார்.
இவ்வாறு இந்தூரில் ராகுல் காந்தி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications