‛‛2 மனைவி இருந்தால் ரூ.2 லட்சம் தருவோம்’’.. காங்கிரஸ் வேட்பாளரின் அடுத்த சர்ச்சை.. பரவும் வீடியோ
போபால்: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன் 2 மனைவி வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான காந்திலால் புரியா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 19, 26, கடந்த 7ம் தேதி என மொத்தம் 3 கட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே தான் காங்கிரஸ், பாஜக உள்பட பிற கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா போட்டியிடுகிறார்.
ரட்லம் தொகுதியில் காந்திலால் புரியா கடந்த முறை தோல்வியடைந்தார். இதனால் மீண்டும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் ரட்லம் தொகுதியில் உள்ள சாய்லானா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காந்திலால் புரியா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது மேடையில் காந்திலால் புரியா பேசுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மனைவி வைத்திருப்போருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்'' என தெரிவித்தார்.
அதாவது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மையப்படுத்தி தான் கண்வாரிலால் புரியா பேசியுள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில் ஒரே நேரத்தில் 2 மனைவி வைத்திருப்பது குற்ற செயலாகும். இந்நிலையில் தான் கன்வாரிலால் புரியாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவினர் மத்திய பிரதேச மாநில செய்தி தொடர்பாளரான நரேந்திர சலுஜா, காந்திலால் புரியா பேசிய அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்பி மாயா நரோலியா கூறுகையில், ‛‛காங்கிரஸ் கட்சி பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். இதனால் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு பெண்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்றார். இதற்கிடையே தான் காந்திலால் புரியா பேசிய வீடியோ வலைதள பக்கத்தில் வெளியாகி வேகமாக பரவி வரகிறது.












Click it and Unblock the Notifications