சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய 'தி ரெட் சாரி' புத்தகம் இந்தியாவில் வெளியீடு: விலை ரூ.395 மட்டுமே
டெல்லி: ஸ்பெயினைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேவியர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி எழுதிய சர்சைக்குரிய புத்தகமான தி ரெட் சாரி இந்தியாவில் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேவியர் மோரோ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி எல் சாரி ரோஜோ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை ஸ்பெயின் மொழியில் எழுதி கடந்த 2008ம் ஆண்டு வெளியிட்டார். அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தைகால பருவம், காதல் விவகாரம், அடங்கிய மருமகளாக இருந்தது, பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறி அந்த பதவியை ஏற்க மறுத்த ஒரே இந்திய அரசியல் தலைவரானது, நேரு காந்தி குடும்பம், வங்கதேச போர், அவசர நிலை, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் உள்ளிட்டவை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் உள்ளவையில் பாதி பொய்யானவை என்றும், சோனியாவின் பெயரை கெடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றும் கூறி புத்தகத்தை இந்தியாவில் வெளியிட காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக ஜேவியருக்கு கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது.
இந்நிலையில் ஜேவியரின் புத்தகம் தி ரெட் சாரி என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகியுள்ளது என்று புத்தகத்தின் எடிட்டோரியல் தலைவர் பிரியா கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
455 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ. 395 ஆகும். முன்னதாக ஜேவியர் எழுதிய பேஷன் இந்தியா புத்தகத்தில் சோனியா காந்தி பற்றி தான் எழுதப்பட்டிருந்தது. சோனியாவின் நண்பர்கள், சகாக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து ஜேவியர் எழுதிய அந்த புத்தகம் 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.