பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்.. பாஜகவின் முரளிதர ராவ் பேச்சால் வெடித்தது சர்ச்சை
போபால்: பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான் இருக்காங்க.. என்று பாஜகவின் பொதுச்செயலாளரும் மத்திய பிரதேச பொறுப்பாளருமான முரளிதர ராவ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முரளிதர ராவ் பேசியதாவது: பாஜகவும் பாஜக ஆட்சிகளும் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன.
பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோரை வாக்கு வங்கிகளாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீது கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.
லூஸ்டாக் விட்டா நாக்கை அறுப்போம்- தெலுங்கானா பாஜக தலைவருக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வார்னிங்
பாஜகவின் முழக்கத்தில் முரண்பாடு
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், பாஜக என்றாலே பிராமணர்கள், பனியாக்கள் கட்சிதான் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது கரிசனம் காட்டுகிறீர்கள், ஆனால் அனைவருக்குமான வளர்ச்சி, முன்னேற்றம் என முழக்கம் எழுப்புகிறீர்கள்.. இது முரண்பாடாக இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
பிராமணர்கள்- பனியாக்கள் எங்க பாக்கெட்டில்
இதற்கு பதிலளித்த முரளிதர ராவ், ஆமாம்.. பிராமணர்களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான் இருக்காங்க.. பாஜகவில் பிராமணர்கள், பனியாக்கள் அதிகம் இருப்பதால்தான் ஊடகங்கள் எங்கள் கட்சியை பிராமணர்கள்-பனியாக்கள் கட்சி என குறிப்பிடுகின்றன. பாஜகவை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெறுவதில் உறுதியாக உள்ளது. அதை நோக்கி பயணித்து வருகிறோம் என்றார்.
காங். கண்டனம்
முரளிதர ராவின் இந்த பதில் இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு விவாதப் பொருளானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான கமல்நாத், அனனிவருக்குமான வளர்ச்சி என்கிற பாஜக. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள முரளிதர ராவோ, பிராமணர்கள்- பனியாக்கள் எங்கள் பாக்கெட்டில் என்கிறார். அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற மமதையில் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர் என சாடினார்.
முரளிதர ராவ் பதிலடி
இதற்கு விளக்கம் அளித்துள்ள முரளிதர ராவ், நாங்கள் எந்த ஒரு சமூகத்தையும் ஒதுக்கிவைக்கவும் இல்லை- பாகுபாடு காட்டவும் இல்லை. நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் துரோகம் இழைத்தது காங்கிரஸ்தான். பழங்குடி இன மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கி இருக்க காரணமே காங்கிரஸ்தான். என்னுடைய கருத்தை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து பரப்பி வருகின்றனர் என்றார்.