ஐசியூவில்.. கொரோனாவால் உயிருக்கு போராடிய கணவர்.. விந்தணுவை சேமிக்க குஜராத்தில் வழக்கு தொடுத்த மனைவி!
காந்தி நகர்: கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் நபர் ஒருவரின் விந்தணுவை மருத்துவர்கள் பாதுகாப்பாக சேமித்து உள்ளனர். அவரின் மனைவி தொடுத்த வழக்கு காரணமாக விந்தணுவை மருத்துவர்கள் சேமித்து இருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு பல இணை நோய்கள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக ரத்த கட்டு பிரச்சனை காரணமாக பாலியல் உறவில் ஈடுபடுவதில் ஆண்கள் பலருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
சிலருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பின் ஆண்மை குறைவு பிரச்சனையும் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் கொரோனா நோயாளி ஒருவரின் விந்தணு குஜராத்தில் சேமிக்கப்பட்டுள்ளது

குஜராத்
குஜராத்தில் உள்ள வதோதராவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் போராடி வரும் நபர் ஒருவரின் மனைவி IVF/ART முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டுள்ளார். ஆணிடம் இருந்து விந்தணுவை பெற்று, அதில் ஒரு விந்தணுவை பெண்ணின் முட்டைக்குள் செலுத்தி கர்ப்பம் தரிக்கும் முறையாகும் இது.

கொரோனா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவரின் விந்தணுவை சேமித்து அதன்மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அந்த பெண் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால் அந்த நபரின் விந்தணுவை எடுக்க அவர் அனுமதி அளிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நபர், அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லை.

கோர்ட்
இதனால் கோர்ட் மூலமாக மட்டுமே அனுமதி பெற்று, அந்த நபரின் விந்தணுவை மருத்துவர்கள் சேமிக்க முடியும். இதையடுத்து அந்த பெண் அவசர வழக்காக குஜராத் ஹைகோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்தோஷ் ஜெ சாஸ்திரி உடனே விந்தணுவை சேமிக்கும்படி அனுமதி வழங்கினார்.

கோர்ட் உத்தரவு
இதையடுத்து கோர்ட் உத்தரவிட கிடைத்தவுடன் உடனடியாக அந்த நபரின் விந்தணு பாதுகாப்பான மருத்துவ முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டு, முறையாக சேமிக்கப்பட்டது. அந்த நபர் இறக்கும்பட்சத்தில் அல்லது பாலியல் உறவில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வசதியாக அவரின் விந்தணு சேமிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்கு
இந்த வழக்கு அவசர வழக்கு என்பதால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதால் இப்படி தீர்ப்பு வழங்கியதாக நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். எதிர்காலத்தில் இந்த தீர்ப்பு மற்ற வழக்குகளில் எடுத்துக்காட்டாக மாறி விட கூடாது என்பதால் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் குஜராத் மாநில அரசின் நிலைப்பாட்டை விளக்கும்படி குஜராத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications