கொரோனா கட்டுப்பாடு- மே.வங்க சிறையில் பயங்கர மோதல்- தீ வைப்பு- ஒருவர் பலி- 12 பேர் படுகாயம்
டம்டம்: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை விடுதலை செய்ய கோரியும் மேற்கு வங்கத்தின் டம்டம் மத்திய சிறையில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிறைவளாகத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் ஒருவர் பலியானதாகவும் 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் சிறைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் பல சிறைகளில் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் டம்டம் மத்திய சிறையில் உள்ள கைதிகள், கொரோனாவால் தாங்களும் மரணிக்க நேரிடும் என்று அஞ்சியும் தங்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் வன்முறையில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை இந்த வன்முறை நீடித்தது. சிறை வளாகாத்தில் அலுவலகங்கள், உணவகம் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் இயல்பு நிலைமை திரும்பவில்லை. போலீசார் மீதும் கைதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இம்மோதல்களில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டம்டம் சிறைக்கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறை அதிகாரிகள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications