கறுப்பாக பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கத் தடை- மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து!
பெங்களூர்: பெங்களூரில் குழந்தை கறுப்பாக பிறந்த காரணத்தினால் மனைவியைக் கொடுமை படுத்தி குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் தடுத்த கணவரிடமிருந்து நீதிமன்றம் மனைவிக்கு விவாகரத்து அளித்துள்ளது.
டெல்லியில் தொழிலதிபர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணவன், மனைவி.
இவர்களுக்கு கடந்த 2011 நவம்பர் 9 ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடந்தது.
கொட்டிக் கொடுத்த பெண் வீட்டார்:
கோடிக்கணக்கில் பணம் நகையை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்திருந்தனர். பல கோடி செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் நடத்தினர்.
பெங்களூரில் குடியேற்றம்:
தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பினர். பின்னர் தம்பதியினர் பெங்களூரில் குடியேறினர். கணவன் ஹெச்.ஏ.எல் இரண்டாவது ஸ்டேஜில் சொந்தமாக தொழில் துவங்கினர்.
மீண்டும் வரதட்சணை:
சில மாதங்களிலேயே பெண்ணின்தந்தை உயிரிழந்தார். அப்போது மனைவி வீட்டாரிடம் 20 லட்சம் ரூபாயை கணவன் பெற்று கொண்டார்.
கடும் சித்ரவதை:
வரதட்சணையாக பணம் கேட்டு மனைவியை கடும் சித்ரவதை செய்துவந்தார். இதற்கிடையே அப்பெண் கர்ப்பம் அடைந்தார்.
கறுப்பாக பிறந்த குழந்தை:
கணவன் வீட்டார் அவரை சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை கறுப்பாக இருந்ததை காரணமாக காட்டி உடல் மன ரீதியாக மனைவியைக் கொடுமைப்படுத்தினர்.
தாய்ப்பால் கொடுக்கத் தடை:
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட விடாமல் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதனால் வேதனை அடைந்த அப்பெண்மணி விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விவாகரத்து அளித்த கோர்ட்:
இருவருக்கும் கவுன்சலிங் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. சேர்ந்து வாழ இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட் விவாகரத்து அளித்தது. அத்துடன் ஒன்றரை வயதான குழந்தை 18 வயது நிறைவடையும் வரை தாய் பராமரிப்பில் இருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications