சாலையில் கிரிக்கெட் விளையாடி பந்த் நடத்திய கன்னட அமைப்பினர்.. பேட் விழுந்து மண்டை பிளந்தது
தாவணகெரே: பந்த் நேரத்தில் சாலையில் கிரிக்கெட் விளையாடி எதிர்ப்பை காட்ட முயன்ற கன்னட அமைப்பை சேர்ந்த ஒருவரின் தலையில் கிரிக்கெட் பேட் விழுந்து மண்டை உடைந்தது.
மகதாயி நதிநீர் பிரச்சினையை முன்வைத்து பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க இன்று பந்த் நடைபெற்று வருகிறது. 2000த்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து பந்த் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தாவணகெரே நகரில் உள்ள ஜெயதேவா சர்க்கிள் பகுதியில், கிரிக்கெட் ஆடி நூதன போராட்டம் நடத்தினர் கன்னட அமைப்பினர். சாலை காலியாக உள்ளதால், கிரிக்கெட் ஆடுகிறோம், அந்த அளவுக்கு பந்த் வெற்றி பெற்றுள்ளது என்று காண்பித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க நினைத்தனர் அவர்கள். ஆனால், நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறு ஒன்று.
கிரிக்கெட் ஆட்டத்தின்போது, தாணவகெரே மாவட்ட கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான, சிவகுமார் பேட் செய்தார். ஆனால், எக்குத்தப்பாக பேட் கையை விட்டு உருவிக்கொண்டு பறந்து சென்று, ஃபீல்டிங் செய்த லோகித் என்பவர் தலைமீது விழுந்தது. இதில் அவரது மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அருகேயிருந்தவர்கள் உடனடியாக லோகித்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications