தோல்விக்கு ராகுல் காரணம் அல்ல- இப்படி சொன்ன அந்தோணி குழு அறிக்கை.. ஆராய போகிறார்களாம்!
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்தான் வென்றது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.
தேர்தலில் வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது ஏன் என்பதற்காக ஏ.கே. அந்தோணி தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்தது. இக்குழுவும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் என நாடு முழுவதும் விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 14-ந் தேதி சோனியாவிடம் அளித்தது.
அந்த அறிக்கையில், தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் அல்ல; ஊடகங்களின் பிரசாரமே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது. கடந்த 1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைத்த போதும் ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழுவை சோனியா அமைத்திருந்தார்.
அக்குழுவின் அறிக்கையை காங்கிரஸ் கமிட்டி ஆராய்ந்து அதற்கேற்ப கட்சியில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல் தற்போதும் ஏ.கே.அந்தோணியின் அறிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி ஆராய்ந்து அதற்கேற்ப கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா, ஏ.கே.அந்தோணி குழுவின் அறிக்கை குறித்து விரைவில் கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி எப்போது கூடும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.