தம்பி சடலத்தை பெற பணம் இன்றி தவித்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா.. ரூபாய் நோட்டு அறிவிப்பின் அவலம்
மங்களூர்: இறந்து போன சொந்த சகோதரரின் மருத்துவ பில்லை செட்டில் செய்ய முடியாமல், திணறிய நிலையில், "இப்போது பொது மக்களின் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று கூறினார், மத்திய அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகா மண்டகோலு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கவுடா. இவர் மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவின் உடன் பிறந்த தம்பியாகும். உடல்நலக்குறைவால் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு இருந்தார் பாஸ்கர் கவுடா.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை பாஸ்கர் கவுடா மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பாஸ்கர் கவுடாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். மேலும் பாஸ்கர் கவுடாவின் சிகிச்சை செலவுக்கான கட்டணம் ரூ.48 ஆயிரத்தை அவரது குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் செலுத்தினர்.
பழைய ரூபாய் நோட்டு
ஆனால் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்து உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை செலுத்தி அவரின் உடலை கொண்டு செல்லுமாறு கூறிவிட்டது.
போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் கவுடாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாஸ்கர் கவுடாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே சதானந்தகவுடா மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்திய உறவினர்களை சமாதானம் செய்தார்.
செக் போட்டதால் தப்பினார்
பின்னர் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ரூ.48 ஆயிரத்தை 'செக்' போட்டு கொடுத்தார். இதையடுத்து பாஸ்கர் கவுடாவின் உடல் மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்கர் கவுடாவின் உடலை அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
கஷ்டத்தை உணர்ந்த அமைச்சர்
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது நிருபர்களிடம் பேசிய சதானந்தகவுடா "இப்போது பொதுமக்கள் படும் அவஸ்தையை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார். ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டு ஒழிப்பை சதானந்தகவுடா ஆதரித்து பேசி வந்தார். ஆனால் போதிய அளவுக்கு பணம் வங்கி மற்றும் ஏடிஎம்கள் வழியாக சப்ளையாகவில்லை என்பதால் மக்கள் அவதிப்படுவது கண்கூடாகியுள்ளது.