நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் மும்பையில் இன்று ஏலம்
மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம்மின் சொத்துக்களில் ஒன்றினை வாங்குவதற்காக முயற்சித்து வரும் முன்னாள் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி. பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையே தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இன்று தாவூத்தின் சொத்துக்கள் மகாராஷ்ட்ரா அரசால் ஏலம் விடப்பட உள்ளது. தெற்கு மும்பையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஏலம் நடைபெறுகிறது.
தாவூத்தின் 7 சொத்துக்களில் ஒன்றினை வாங்குவதற்கு முன்னாள் பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான பாலகிருஷ்ணன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தாவூத் தரப்பில் இருந்து அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் என்பவரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பாலக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஷகீலிடம் இருந்து தனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் கூறினார். தனியார் என்.ஜி.ஓ மூலம் இந்த சொத்தை வாங்க முயற்சித்து வருவதாகவும், பின்னர் அந்த இடத்தில் கல்வி நிறுவனம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், "பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஒருவர் நம்முடைய நாட்டில் அதிகாரம் செலுத்த முடியாது" என்றும் அவர் கூறினார்.