2 வாரத்தில் 15 பேர் மரணம்.. கேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்.. புதிதாக பரவும் கொடூர நோய்!
கேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரண்டு வாரத்தில் மொத்தமாக 15 பேர் இறந்து இருக்கிறார்கள்.
இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தற்போது சாதாரண நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேரும் எல்லோருக்கும், இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை தவிர வேறு மாநிலங்களில் எங்கும் பரவவில்லை. இந்திய சுகாதாரத்துறை மிகவும் கவனமாக இந்த வைரஸ் பாதிப்பை கவனித்து வருகிறது.

18 நாட்களாக பரவுகிறது
சரியாக 18 நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒருவர் இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டதாக ''நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி'' தெரிவித்துள்ளது. முக்கியமாக கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் அதிகம் தாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிகிச்சை
இதற்கு இதுவரை எந்தவிதமான சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்த எல்லோரும் இரண்டு வாரங்களுக்குள் மரணம் அடைந்துவிடுகிறார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகத்தில் எந்த மருத்துவ துறையிலும் இந்த நோய்க்கு இதுவரை மருத்துவமோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன அறிகுறி
இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி எல்லா வைரஸ் போலவே சாதாரண காய்ச்சலில் இருந்தே தொடங்கும். ஆனால் இந்த சாதாரண காய்ச்சல் உடனடியாக பெரிதாகும். முக்கியமாக மூச்சு விடும் பிரச்சனை இருக்கும். ரத்த கொதிப்பு மொத்தமாக குறையும். என்ன விதமான சிகிச்சை அளித்தாலும் மரணம் அடையும் வரை இந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கேரளா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வௌவால் மூலம் பரவும்
இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமில்லாமல் விலங்குகளையும் தாக்கும். முக்கியமாக இந்த வைரஸ் முதலில் வௌவால்களை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் எதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள் சாப்பிட்டு இருந்தால், இந்த வைரஸ் தாக்கி இருக்கும் என்று கூறியுள்ளார். இது எப்படி பரவுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications