அக்னி வெயிலுக்கு 1,412 பேர் பலி, அனல் காற்று மேலும் வீசுமாம்!
டெல்லி: அனல்காற்று.... மண்டையை பிளக்கும் வெயில் என மக்களை வெளியே தலைகாட்ட முடியாமல் அக்னி நட்சத்திரம் ருத்ர தாண்டவமாடி வருகிறது. அனலை கக்கும் கோடை வெயிலுக்கு நாடுமுழுவதும் இதுவரை ஆயிரத்து 412 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக ஆந்திரா மாநிலத்தில் ஆயிரத்து 20 பேரும், தெலுங்கானாவில் 360 பேரும் பலியாகி உள்ளனர். ஒடிசாவில் 45 பேரும், குஜராத்தில் 7 பேரும் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கும் என கூறப்படுகிறது.
மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர காலம் 29ஆம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது. வெயிலின் உக்கிரம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. வெயிலின் ருத்ரதாண்டவத்தை தாங்க முடியாமல் மக்கள் சுருண்டு விழுந்து பலியாகி வருகின்றனர்.
அதிகபட்சமாக ஆந்திராவில் 1,020 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் அதிக அளவாக 202 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 130 பேரும் விசாகப்பட்டிணத்தில் 112 பேரும் விஜயநகரத்தில் 78 பேரும் நெல்லூரில் 74 பேரும் பலியாகியுள்ளனர்.
அந்த மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 90 பேர் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உயிரிழந்துவிட்டனர். அதேபோல மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 10 பேரும் கிருஷ்ணா மாவட்டத்தில் 49 பேரும் சித்தூரில் 29 பேரும், கடப்பாவில் 22 பேரும் கர்னூலில் 17, ஸ்ரீகாகுளத்தில் 25 பேரும், ஆனந்தபூரில் 14 பேரும் பலியாகிவிட்டனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆந்திரா அரசு எடுத்து வருகிறது.
இதேபோல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக 99 பேர் பலியாகியுள்ளனர். கம்மம் மாவட்டத்தில் 72 பேரும் கரீம் நகரில் 45, மெகபூப் நகரில் 35 பேரும் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வாரங்களுக்கு முன்புவரை தென்மாவட்டங்களில் கோடைமழை பெய்து குளுமையை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஒருவாரகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலுக்கு தாக்கத்திற்கு 4 பேர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் அதிகபட்சமாக 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக ஆக்ராவில் 114.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவாகியுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் மேலும் இருதினங்களுக்கு நீடிக்கும் எனவும், அனல்காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.