கான்பூர் ரயில் விபத்து பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்ராயன் அருகே நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா - இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 15 பெட்டிகள் தலைகீழாக தடம் புரண்ட இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி லேசான மற்றும் படுகாயமடைந்துள்ள 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மிகவும் கோரமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்துக்கு, குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் சோனியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தொடரும் மீட்பு பணிகள்
ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகளும் மறு சீரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுரேஷ் பிரபு எச்சரிக்கை
சம்பவ இடத்திற்கு வந்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆய்வு நடத்தினார். விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் சுரேஷ் பிரபு, அதிகாரிகளின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என தெரிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதேசமயம், ரயில் விபத்தை அரசியலாக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிரிழப்பு அதிகரிப்பு
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று 20 பேரில் தொடங்கி மரணம் இப்போது வரை 200 ஆக உயர்ந்து உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.