பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்… கொல்வோருக்கு ஆயுள்.. இது ராஜஸ்தான் ஹைகோர்ட்!
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஜெய்ப்பூர்: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது ராஜஸ்தானில் உள்ள சட்டப்படி பசுவை கொன்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
விற்கத் தடை
ராஜஸ்தானில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடையுள்ளது.
தடைக்கு இடைக்கால தடை
மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்ட உடன் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாட்றைச்சி மற்றும் மாடு விற்பனை மீதான தடைக்கு 4 வார காலம் இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் விதித்தது.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
இதனைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதே போன்று காங்கிரஸ் கட்சியும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கேரளாவில் சிறப்பு சட்டசபைக் கூட்டம்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாட்டுக்கறி தடை மீது விவாதிக்க சிறப்பு சட்டசபையை கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் இப்படி கூறியிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.