வேகம் பிடிக்கிறது தினகரன் லஞ்ச விவகாரம்.. சம்மனுடன் சென்னை கிளம்பினார் டெல்லி ஏசி ஷெராவத்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு சம்மன் வழங்க டெல்லி காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னை வருகிறார்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டெல்லி தொழிலதிபரிடம் லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரனிடம் விசாரணைக்கு வருமாறு அழைக்கும் சம்மனை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னைக்கு புறப்பட்டார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இன்று சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்பதற்காக டெல்லி தொழிலதிபர் சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் ரூ.1. 03 கோடி லஞ்சம் அளித்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தெற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவை போலீஸார் கைது செய்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரிடம் நேரில் விளக்கம் அளிப்பதற்காக சம்மனுடன் டெல்லி காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவார்.
சம்மனை ஏற்று தினகரன் டெல்லி போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அதன் பின்னரே அவர் கைதாவாரா என்பது தெரிய வரும்.