இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு... ஏப்ரல் 11க்கு ஒத்திவைப்பு!
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று வழக்கு குறித்த ஆவணங்களை மீண்டும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் மீண்டும் தர மனுதாரர் கோரிக்கை விடுத்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணியினர் உரிமை கோரியதால் சின்னம், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் தரப்பினர்களும் தங்களது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள்,எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதனை தொடர்ந்து தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, தரகராக செயல்பட்ட சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு தினகரன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து வழக்கு பட்டியாலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்குதொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் மீண்டும் தர மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஏப்ரல் 11ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.