செலவு கணக்கில் வேறுபாடு- அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்த செலவு கணக்கும், தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்த கணக்குக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கான நிதி குறித்து ஏற்கெனவே மத்திய அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அன்னிய நாட்டு சக்திகளிடம் இருந்து பணம் பெற்று வருகிறார் கெஜ்ரிவால் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்கள் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பணம் பெற்ற சிடி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் ஆணையமே, ஆம் ஆத்மி கட்சியின் செலவு கணக்குகளை ரகசியமாக கண்காணித்தது.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் செலவு கணக்கை ஒப்படைத்தது. ஆனால் தேர்தல் அதிகாரிகளின் ஆய்வுப்படி, ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த கணக்கு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அக்கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது,.