டெல்லியில் பா.ஜ.க ஆட்சிக்கு அனுமதிக்கக்கூடாது: ஜனாதிபதியிடம் முறையிடுகிறது ஆம் ஆத்மி கட்சி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று ஜனாதிபதியிடம் முறையிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.
ஆனால் சில நாட்களிலேயே காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் நீண்ட நாட்களாக டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரணாப்புக்கு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பிடித்த கட்சி என்ற முறையில் பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநரின் இம்முடிவுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதியை சந்தித்து முறையிடவும் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.