புதிய தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து நியமனத்துக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, வரும் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஹெச்.எல். தத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் முன்னாள் அதிகாரியும், வழக்கறிஞருமான நிஷா பிரியா பாட்டியா ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஹெச்.எல். தத்து தமக்கு பாலியல் சித்ரவதை கொடுத்தது குறித்த புகார்கள் நிலுவையில் இருக்கிறது. இத்தகைய நபரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி பிரதீப் நந்த்ரஜாக் ஆகியோர் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான உத்தரவில் நீதிபதிகள், புதிய தலைமை நீதிபதி நியமனத்துக்கான ஜனாதிபதியின் உத்தரவு வெளியிடப்பட்டு விட்டது. இதில் இந்த நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது. மேலும் இந்த வழக்கில் பொது நலன் எதுவும் இல்லை என கூறி உள்ளனர்.