திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனு தள்ளுபடி!
திருமண செலவுக்கான உச்சவரம்பை நீக்கக் கோரும் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்புக்கு எதிரான மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் திருமணத்துக்கு ரூ2.5 லட்சம் மட்டுமே எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கு விசாரணையின் போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், திருமண அழைப்பிதழ்கள் இருப்பவர்கள் வங்கிக்கு சென்று ரூ2.5 லட்சம் எடுத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில் திருமண செலவுக்கான உச்சவரம்பை நீக்க கோரும் மனுவை இன்று தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.