சென்னை நோக்கியா ஆலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்க கோர்ட் அனுமதி- 8,000 ஊழியர்கள் நிம்மதி

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி வரியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களும் தங்கள் நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக இந்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இது குறித்து விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் வரி தொடர்பான விசாரணை தனியாக தொடர்ந்து நடைபெறுமென்றும் இடைக்கால முன்வைப்புத் தொகையாக ரூ.2,250 கோடியை அரசுக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 8,000 ஊழியர்களும், 30000 சப் காண்ட்ராக்டர்களும் இத்தீர்ப்பின் மூலம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications