டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுக்கிறது டெல்லி போலீஸ்!
டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தாக்கல் செய்ய உள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புரோக்கர் சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. இவ்வழக்கில் சுகேஷ், தினகரன் மற்றும் மல்லி என்ற மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிடிவி தினகரனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்த டெல்லி போலீஸ் சென்னைக்கு அழைத்து வந்து துருவி துருவி விசாரணை நடத்தியது. தினகரன் வீட்டில் அவரது மனைவி அனுராதாவிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்துக்கு தினகரன் ரூ50 கோடி லஞ்சம் கொடுக்க உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேருக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. தினகரனுக்காக கொச்சி வழியாக டெல்லிக்கு சரக்கு விமானத்தில் பணம் எடுத்துச் சென்றதில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் உடுமை ராதாகிருஷ்ணனையும் டெல்லி போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் தினகரனை மேலும் 2 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது டெல்லி போலீஸ். 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட தினகரன், மனைவி அனுராதாவிடம் துருவி துருவி விசாரித்தபோது கதறி கதறி அழுதார் என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.