முதல்வருக்குப் புதியவர்.. சசி குடும்பம் வசம் அதிமுக.. தலைகீழாக மாறும் டெல்லி வியூகம்
தினகரன் வலுவாக இருப்பதாக உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளதையடுத்து அதிமுக தொடர்பான வியூகத்தை மாற்றுகிறது டெல்லி.
டெல்லி: தினகரன் முகாமில் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதை உறுதி செய்துள்ள டெல்லி தம்முடைய வியூகத்தை தலைகீழாக மாற்றும் முடிவில் இருக்கிறதாம்.
அதிமுகவில் சடுகுடு விளையாடி வந்தது டெல்லி. அதிமுகவின் முதுகில் ஏறியாவது தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்பது டெல்லியின் கணக்கு.
இதற்காக பிரிந்து கிடந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை இணைத்து வைத்தது. ஆனால் தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்க புதிய தலைவலி தொடங்கியது.
பெரும்பான்மை இழந்த எடப்பாடி
தற்போதைய நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. இதனால் முதல்வர் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தினகரனிடன் 50 எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில்தான் தினகரன் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதை உறுதி செய்து உளவுத்துறை அறிக்கை ஒன்றை டெல்லிக்கு அனுப்பியது. இதனால் டெல்லி அதிர்ந்து போய் வியூகங்களை மாற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
புதிய முதல்வர்?
தற்போதைய சூழலில் தினகரன் தரப்பையும் இணக்கமான நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம். தினகரன் தரப்பின் கோரிக்கைப்படி சபாநாயகராக இருக்கும் தனபாலை முதல்வராக்குவது எனவும் தினகரன் தரப்பு வசமே அதிமுகவை ஒப்படைக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறதாம்.
புதிய கணக்கு
இப்படியான ஒருநிலையில்தான் அதிமுக ஒருங்கிணைந்த கட்சியாக இருக்கும்; அதன் வாக்கு வங்கியையும் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய முடியும் என்பதுதான் டெல்லியின் புதிய கணக்காக இருக்கிறதாம்.