வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ்! வருமான வரித்துறை கெடுபிடி
டெபாசிட்தாரர்கள் அளிக்கும் விளக்கத்தை பெற்றுக்கொண்டு, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
டெல்லி: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு, வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்க வருமான வரித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம் (சிபிடிடி) மூலமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, அப்போது புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
18 லட்சம் மக்கள்
இதையடுத்து கருப்பு பணத்தை பலரும் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். சிலர் பழைய கடன்களை அடைத்தனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 18 லட்சம் பேர் ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வங்கி கடனை செலுத்தியவர்கள்
ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மட்டுமின்றி, இந்த அறிவிப்பிற்கு பிறகு வங்கி கடன் பாக்கிபோன்றவற்றை ரொக்கமாக செலுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பாக்கியை ரொக்கமாக செலுத்தியவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விளக்கம்
ஆபரேசன் கிளீன் மணி, என்ற கோஷத்தின் கீழ், வருமான வரித்துறை அதிகாரிகள், 18 லட்சம் டெபாசிட்தாரர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் விளக்கம் கேட்டுள்ளனர். இ-மெயில்களும் அனுப்பப்பட்டுள்ளன. பிப்ரவரி 15க்குள் இந்த பணத்திற்கான மூலம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று,
நடவடிக்கை பிறகு
டெபாசிட்தாரர்கள் அளிக்கும் விளக்கத்தை பெற்றுக்கொண்டு, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஏனெனில் புதிய வரி விதிப்பு கொள்கை மார்ச் 31க்கு பிறகுதான் அமலுக்கு வருகிறது என்பதால் அதன் அடிப்படையில் சந்தேககிக்கப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.