ரூ. 24,000க்கு மேலும் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி.. ஆனால் 2000, 500 ரூபாய் நோட்டாதான் தருவாங்களாம்!
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகளில் எடுக்கும் பணத்தை எடுப்பதற்கான உச்சவரம்பை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.
டெல்லி: வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட் செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பணத்திற்கு தடை
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து அதனை மாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. முதலில் 4000 மாற்றப்பட்டது, பின்னர் 4500 வரை மாற்றலாம் என்று கூறப்பட்டது. இது மீண்டும் 2000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
வங்கிகளில் கூட்டம்
வங்கியில் 2000 ரூபாயை கொடுத்து மாற்றினால் விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்தனர். நவம்பர் 24ம் தேதிவரை வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.
ரிசர்வ் வங்கிகளில் பணம்
நவம்பர் 24ம் தேதிக்குப் பின்னர் வங்கிகளில் பணத்தை டெபாசிட் மட்டுமே செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி கவுண்டர்களில் பணத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிகளில் தினசரியும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.
ரிசர்வ் வங்கி சலுகை
டெபாசிட் செய்பவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை. வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தேவையான பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர். அவர்களுக்கு சில சலுகைகள் மத்திய அரசு அறிவித்தது.
சில்லறை நோட்டு பஞ்சம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டிற்கு விதிக்கப்பட்ட தடையால் பணப்புழக்கம் குறைந்து பணத்தட்டுபாடு ஏற்பட்டது. மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தேவையான பணத்தை எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.