பஞ்சாப், ஹரியானாவில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவு குண்டர்கள் வெறியாட்டம்-28 பேர் பலி; 250 பேர் படுகாயம்
பஞ்ச்குலா: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுத் சாமியார் ராம் ரஹீமின் ஆதரவு குண்டர்கள் பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெறியாட்டம் போட்டனர். இந்த வன்முறையில் சிக்கி இதுவரை 28 பேர் பலியானதாகவும் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேரா சச்சா சவுத் அமைப்பின் தலைவரான சாமியார் ராம் ரஹீம் பக்தை ஒருவரை பலாத்காரம் செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊடக வாகனங்கள்
இத்தீர்ப்பைத் தொடர்ந்து ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறை வெறியாட்டம் போட்டனர். ஊடக வாகனங்கள் மீதும் செய்தியாளர்கள் மி0இதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
வானத்தை நோக்கி...
இதைத் தொடர்ந்து வன்முறையாளர்களை விரட்டியடிக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசியது போலீஸ். தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் சாமியார் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் போலீசார் வானத்தை நோக்க் துப்பாக்கியால் சுட்டும் எச்சரிக்கை விடுத்தனர்.
தடியடி
ஆனாலும் கலைந்து செல்லாத சாமியாரின் ஆதரவாளர்களை தடியடி நடதிதி ஓடவைத்தனர். மேலும் பஞ்சாப் மாநிலம் மலோட்டில் ரயில் நிலையம் மற்றும் பெட்ரோல் பங்குக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. பதின்டாவிலும் வன்முறை வெடித்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப், ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை வெடித்தது
பஞ்சாப், ஹரியானாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்குமாறு பஞ்சாப் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
28 பேர் பலி- 250 பேர் படுகாயம்
ராம் ரஹீம் ஆதரவு குண்டர்களின் அக்கிரம வன்முறையில் சிக்கி 28 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்த வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பல இடங்களில் ராணுவம் களமிறங்கி குண்டர்களை ஒடுக்கியது.