ஹரித்துவார் வெறுப்பு பேச்சு.. ஜிதேந்திர தியாகியை கைது செய்த உத்தரகண்ட் போலீஸ்
டேராடூன்: ஹரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசியதாக ஜிதேந்திர தியாகி என்பவரை உத்தரகண்ட் போலீசார் தற்போது தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இஸ்லாம் மத்திற்கு எதிரான கருத்துகளைப் பேசினார். அதிலும் இந்த கூட்டம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'பல மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. எச்சரிக்கையாக இருங்கள்.. அச்சம் வேண்டாம்..' பிரதமர் மோடி பேச்சு
ஹரித்துவார் மாநாடு
இந்த மாநாட்டில் பேசிய இந்து மத தலைவர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய சிலர், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு கூறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன சாந்த் காளிசரண் மகாராஜ் அரசியலின் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று கூறியது சலசலப்பை உருவாக்கியது.
புகார்
இந்த மாநாட்டில் இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி என்பவரும் கலந்து கொண்டார். அவர் இந்தக் கூட்டத்தில் வேண்டுமென்ற இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவது போல பேசியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து அவருக்கு எதிராக குல்பஹர் கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
கைது
அதன் அடிப்படையில் ஜிதேந்திர தியாகியை உத்தரகண்ட் போலீசார் கைது செய்தனர். அதேபோல இந்த மாநாட்டில் கலந்துகொண்ட யதி நரசிங்கானந்த் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் அதிகரிக்கும் வெறுப்பு பேச்சு தொடர்பாகச் சமீபத்தில் ஐஐஎம் மாணவர், ஆசிரியர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் போலீசார்
ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக உத்தரகண்ட் போலீசார் தனது ட்விட்டரில், "ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் வகையில் இவர் பேசிய பேச்சு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயண் தியாகி மற்றும் பலர் மீது ஐபிசி 153A கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளனர்.