'ஆர்.எஸ்.எஸ்.' வைதிக்- ஹபீஸ் சயீத் சந்திப்புக்கு இந்திய தூதரகம் உதவியதா?: ராகுல் கேள்வி
யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமாகிய வைதிக் அண்மையில் பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை வெடிக்க வைத்துள்ளது.
ஹபீஸ் சயீத்தை சந்திக்க மத்திய அரசே வைதிக்கை அனுப்பி வைத்ததா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ஆனால் மத்திய அரசுக்கும் வைதிக்- ஹபீஸ் சயீத் சந்திப்புக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் ஹபீஸ் சயீத்- வைதிக் சந்திப்பை ராம்தேவ் நியாயப்படுத்தி பேசி வருகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வைதிக் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்போதைய முக்கிய கேள்வி, ஹபீஸ் சயீத் -வைதிக் சந்திப்புக்கு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் உதவியதா? என்பதுதான்.அப்படி இந்திய தூதரகம் இருவரது சந்திப்புக்கும் உதவி இருந்தால் மிகவும் மோசமான ஒன்றகாத்தான் கருத வேண்டும் என்றார்.