கூட்டுறவு வங்கிகளில் கட்டுக்கட்டாக குவிந்த கேரள அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம்?
கேரள கூட்டுறவு வங்கிகளில் அரசியல்வாதிகள் பலர் கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பதாக வருமான வரித்துறை சந்தேகப்படுகிறது.
பெங்களூரு: கேரள மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அந்த மாநில அரசியல்வாதிகள் பலர் கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளதாக வருமான வரித்துறை சந்தேகப்படுகிறது. இதையடுத்து அங்கு நவம்பர் 8ம் தேதிக்கு முன்பும், பின்பும் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வருமான வரித்துறை ஆய்வில் இறங்கியுள்ளது.
பல கூட்டுறவு வங்கிகள் நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு பெற்ற கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை 8ம் தேதிக்கு முன்னரே பெற்றதாக கணக்குக் காட்டி வருவதாகவும் நம்பப்படுகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கேரள அரசியல்வாதிகள் பலர் கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்து விட்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து கேரள வருமானவரித் துறையினர் ஆய்வில் குதித்துள்ளனர்.
பழைய ரூபாய்களில் முதலீடு
எந்தெந்த கூட்டுறவு வங்கிகளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்தப் பணத்தை எப்படி இந்த வங்கிகள் ஏற்றுக் கொண்டன என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
தேதியில் குழப்பம்
அதேபோல எந்தெந்த தேதியில் இந்தப் பணம் பெறப்பட்டது. யாரேனும், 8ம் தேதிக்குப் பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு 8ம் தேதிக்கு முன்பு டெபாசிட் ஆனது போல கணக்குக் காட்டியுள்ளனரா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
கறுப்புப் பண முதலைகள்
மிகப் பெரிய அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கறுப்புப் பணத்தை கூட்டுறவு வங்கிகளில் பதுக்கி வைப்பதுதான் வழக்கம் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு கேரளாவில் உண்டு.
அதுதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கோ!
எனவேதான் பிற மாநிலங்களை விட கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில் பணப் புழக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கட்சிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பினாமி பெயர்களில்
பினாமி பெயர்களில் பல அரசியல்வாதிகள் தங்களது பணத்தை கூட்டுறவு வங்கிகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கணக்குகளும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவாம்.