மகாத்மா காந்தியின் உயிரை காக்க அமெரிக்கா முயற்சித்ததா? மறு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மகாத்மா காந்தியின் உயிரை காக்க அமெரிக்கா முயற்சித்ததா? என்பது குறித்து அறிய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மகாத்மா காந்தியின் உயிரை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா முயற்சித்ததா? என்பது குறித்து அறிந்து கொள்ள உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தேசப்பிதா காந்திஜி கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மும்பையைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஜனவரி 30-ஆம் தேதி இரவு அமெரிக்க அரசுக்கு தந்தி அனுப்பி வைக்கப்பட்டது.
தந்தியில் தகவல்
கோட்சேவை அதே இடத்திலேயே மடக்கி பிடித்த அமெரிக்க தூதரக அதிகாரி ஹெர்பர்ட் டாம் ரெய்னர் இதுதொடர்பான தகவல்களை அந்த தந்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அமெரிக்க அரசுக்கு ரெய்னர் அனுப்பிய அறிக்கையை வெளியிடவில்லை. இதேபோல் சம்பவம் நடந்த அன்று ரெய்னர் 3-வதாக ஒரு தந்தியையும் வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.
ரகசியப் பட்டியல்
அது மிகவும் ரகசியம் என்ற அடிப்படையில் அதற்கான பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ரெய்னர் அனுப்பிய தந்தியின் விவரங்களை அமெரிக்காவின் சுதந்திர தகவல் சட்டத்தின்படி வெளியிட வேண்டும்.
மறுவிசாரணைக்கு உத்தரவு
காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்து அமெரிக்காவின் உளவு துறை அவருக்கு பாதுகாப்பு அளித்திருக்கலாம். கோட்சேவும் காந்தியை சுட்டுக் கொல்ல ஏற்கெனவே முயற்சி செய்திருக்கலாம். எனவே இதுகுறித்து மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் பங்கஜ் பத்னிஷ் தெரிவித்துள்ளார்.
பங்கஜின் மனு தள்ளுபடி
இந்த மனு வரும் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே இதுபோன்ற பொதுநல மனுவை பங்கஜ் பத்னிஷ் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.