டெங்கு கொசு, காமெடியன், அவரை பற்றி பேசாதீர்கள்.. ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்த தினகரன்
Recommended Video
பெங்களூர்: அமைச்சர் ஜெயக்குமாரை டெங்கு கொசு என விமர்சனம் செய்துள்ளார் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன். தன்னை மூட்டைப் பூச்சியோடு ஜெயக்குமார் ஒப்பிட்டு பேசியதற்கு பதிலடியாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் நேற்று பேட்டியளித்த ஜெயக்குமார், தினகரன் ஒரு டெங்கு கொசு, நசுக்கி போட்டுவிட்டு போக வேண்டும் என கேலி தோரணையில் தெரிவித்த நிலையில் தினகரன் இன்று அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்தார்.
பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தனது சித்தி, சசிகலாவை, இன்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
மவுன விரதம்
இதன்பிறகு நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். ஜெயலலிதா நினைவு தினம் முதல் சசிகலா மவுன விரதம் இருந்து வருகிறார். ஜனவரி இறுதி வரை அவர் மவுன விரதம் இருப்பார்.
ஜெயக்குமார் பேச்சு
அமைச்சர் ஜெயக்குமார் என்னை மூட்டைப்பூச்சி என கூறியுள்ளார். ஜெயக்குமார் பேசுவதை பொருட்டாக கருதுவதே இல்லை. என்னை பொறுத்தளவு அவர் காமெடியன் அவ்வளவே.
ஜெயக்குமார் ஏரியாவில் வெற்றி
ஆர்கே நகர் தேர்தலில் குக்கர் காய்லாங்கடைக்கு போகப்போகிறது என்று கூறியவர் ஜெயக்குமார். ஆனால் அவர்பிறந்து வளர்ந்த காசிமேடு பகுதியில், சுயேட்சையாக நான் போட்டியிட்டு அவர்களைவிட அதிக ஓட்டு வாங்கியுள்ளேன்.
அலட்சிய பேச்சுக்கள்
அலட்சியமாக பேசினால் அறிவாளி என நினைப்பார்கள் என்று ஜெயக்குமார் நினைத்துக்கொள்கிறார். நிருபர்களான நீங்கள், ஜெயக்குமார் என்னை பற்றி விமர்சனம் செய்தால், முதலில் அவர்கள் வேட்பாளர் தோற்றது ஏன் என்று பதில் கேள்வி எழுப்ப வேண்டும்.
டெங்கு கொசு
அவர் ஒரு டெங்கு கொசு. மூட்டைபூச்சியாவது கடித்தால் கொஞ்சம் ரத்தத்தைதான் உரிஞ்சும். டெங்கு கொசு ஆபத்தானவை. இனிமேல் ஜெயக்குமார் பற்றி என்னிடம் கேள்வி கேட்டு எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவரை பற்றி கேள்வி கேட்டால் மவுனமாகத் தான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.