“நங்கூரம்” போட்ட தினேஷ் கார்த்திக்..விரட்டிய தென்னாப்பிரிக்கா! இந்திய வெற்றிக்கு உதவிய அவரின் 17 ரன்
கவுஹாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 பந்துகளில் தினேஷ் கார்த்திக் விளாசிய 17 ரன்கள்தான் கடைசி நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி220 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
சட்டென கத்திய ரோஹித்! முகம் சுளித்த தலைகள்! வெட்ட வெளிச்சமான பிரச்சனை! இந்திய அணிக்கு பெரிய சிக்கல்?
தினேஷ் கார்த்திக்
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 7 பந்துகளை மட்டுமே பிடித்து 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரியை விளாசி 17 ரன்களை குவித்தார்.
முக்கியமான 17 ரன்கள்
விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையிலும் தினேஷ் கார்த்திக்கிடம் ஸ்ட்ரைக்கை மாற்றுமாறு கேட்காமல் அவரை அடித்து ஆட சொன்னார். இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கோலியை கொண்டாடி வருகின்றனர். கடைசியில் இந்த ரன்கள்தான் இந்திய அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்தன. 2வது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தது.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். 19 வயதில் இந்திய அணியில் அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், தன்னுடைய அபாரமான விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையால் பலரை கவர்ந்தார். ஆனால் அடுத்த ஆண்டு வந்த தோனி என்ற புயல் தினேஷ் கார்த்திக்கின் இருப்பை அசைத்து பார்த்தது.
தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் இதனால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் நிலையற்றதாக மாறியது. ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த சில தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பை பெறுவதும் பின்னர் நீக்கப்படுவதுமாக இருந்தார் தினேஷ் கார்த்திக். இதுவரை 94 ஒருநாள் போட்டிகள், 26 டெஸ்ட் போட்டிகள் 52 டி20 போட்டிகள் 229 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
வங்கதேச போட்டி
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை - வங்கதேசம் இடையிலான நிதாஹஸ் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக 22 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததன் மூலம் மீண்டும் கவனிக்கத்தக்க வீரர் ஆனார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்த தினேஷ் கார்த்திக் கமெண்டரி பணியும் செய்தார்.
மீண்டும் ஃபார்மில் கார்த்திக்
அவர் ஓய்வை அறிவிக்கும் முன்பே அவர் ஓய்வுபெற்றதைபோல் (2004-2019) என்று குறிப்பிட்டது ஒரு விளையாட்டு தொலைக்காட்சி. ஆனால், கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன்னுடைய பார்மை நிரூபித்து இந்திய அணியில் இடம்பெற்று இருக்கிறார்.
விமர்சனம்
இவரை அணியில் தேர்வு செய்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், "வெறும் 10-12 பந்துகளை விளையாடுவதற்காக ஒரு வீரரை டி20 போட்டியில் சேர்க்க முடியாது. அவரால் வெற்றியை பெற்றுத் தர முடியும் என உறுதியாக கூற முடியாது." என்று விமர்சித்தார். இந்த விமர்சனங்களுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.