முதல்வரே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது கேவலம் பதவி நீக்கம் செய்யணும் - துரைமுருகன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தமிழக முதல்வரே பணப்பட்டுவாடா செய்தது கேவலமான செயல் என்று திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மும்பை: வருமான வரி சோதனைக்கு உட்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக முதன்மை செயலர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர்களுக்கு முதல்வரே பணம் கொடுத்த கேவலமான செயல் என்றும் கூறியுள்ளார்.
திமுக முதன்மை செயலர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மும்பையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
பணம் பட்டுவாடா ஆதாரங்கள்
வருமான வரித்துறையின் சோதனையில், வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. தமிழகத்தில் 50 இடங்களில் நடந்த சோதனையில், 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் முகமது வீட்டில், 3.5 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மற்றொரு உதவியாளர் கல்பேஷ் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.
பதவி நீக்கம் செய்க
பணப்பட்டுவாடா செய்யப்பட்டாதாக வெளியான பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சம்பத், ராஜலட்சுமி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 89 கோடி ரூபாய் பங்கிட்டு கொடுத்துள்ளனர். அந்த பட்டியலையும் ஆளுநர் மனுவிடம் அளித்துள்ளோம்.
படு கேவலம் இல்லையா?
இது மிகவும் கேவலமான விசயம், முதல்வரே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாக பட்டியலில் பெயர் உள்ளது. இது ஜனநாயகப் படுகொலை, பட்டியலில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசு இருக்கக் கூடாது என்று விரும்புகிறோம் எனவே ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு
முன்னதாக மும்பையில் ஆளுநரை சந்தித்த திமுக நிர்வாகிகள் வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்திய கடிதத்தை அளித்தனர். வருமான வரி சோதனை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆளுநரிடம் கோரிக்கை
டெல்லியில் கடந்த 30 நாள்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை சந்தித்த திமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.