கூண்டிலேயே நில்லுங்க… சசிகலா, இளவரசிக்கு தண்டனை கொடுத்த நீதிபதி
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்த சசிகலா,இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தண்டனை அளித்தார்.
சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பிற்பகலில் இறுதிவாதம் நடைபெறும் வரை விசாரணை கூண்டிலேயே நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை ஏற்கனவே முடித்து விட்டார்.
இதையடுத்து, சசிகலா தரப்பு வக்கீல்கள் தங்களது இறுதி வாதத்தை கடந்த 19-ந்தேதி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வக்கீல்கள் இறுதி வாதத்தை தொடங்கவில்லை.
கடந்த 4 நாட்களாக இறுதி வாதத்தை தொடங்க கால அவகாசம் வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல்கள் கோரி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அவகாசம் கேட்ட சசிகுரூப்
அப்போது சசிகலா தரப்பு வக்கீல் மணிசங்கர், இறுதி வாதத்தை தொடங்குவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

ரூ.3000 அபராதம் கட்டுங்க
அதன்பிறகும், மாலை 4 மணிவரை சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வக்கீல்கள் இறுதி வாதத்தை தொடங்கவில்லை.அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை காலதாமதம் செய்வதாக கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.

26ல் ஆஜராக உத்தரவு
மேலும் 26-ந் தேதி (திங்கட்கிழமை) இறுதி வாதத்தை கட்டாயம் தொடங்க வேண்டும் என்றும், இறுதி வாதம் நடைபெறும் நாட்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

கூண்டில் நில்லுங்க
இதைத் தொடர்ந்து இன்று ஆஜரான சசிகலா, வழக்கறிஞர் டெல்லி சென்றுள்ளதால் இறுதி வாதம் தொடங்கமுடியாது என்று கூறினார். சசிகலாவின் கருத்தை ஏற்கமறுத்த நீதிபதி டி.குன்ஹா கடும் கண்டனம் தெரிவித்தார். மதியம் 3 மணிக்கு இறுதி வாதம் தொடங்கும். அது வரை விசாரணை கூண்டிலேயே நிற்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications