நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற மாநில கட்சி திமுக - ரூ77.63 கோடி வருவாய்
நாட்டிலேயே அதிக வருவாய் உள்ள மாநில கட்சி திமுக என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
டெல்லி: நன்கொடை மூலம் திமுகவுக்கு ஆண்டுக்கு ரூ77.63 கோடி வருவாய் வருகிறது என்று சமீபத்தில் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2004-05ஆம் நிதியாண்டு முதல் 2014-15ஆம் நிதியாண்டு வரை அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (Association for Democratic Reforms - ADR) கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இப்போது 2015-16ஆம் ஆண்டில் கட்சிகளின் வருமானத்தை பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.
இதில் கட்சிகள் பெற்ற நன்கொடை, கட்சிகளின் சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளிலிருந்து வரும் வட்டி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்.
திமுக வருமானம் ஆண்டுக்கு ரூ77.63 கோடி
இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு ஆண்டுக்கு ரூ77.63 கோடி வருவாய் வருகிறது அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக வருவாய் உள்ள மாநில கட்சி திமுக என்ற பெருமையை பெறுகிறது.
அதிமுக வருமானம் ரூ54.938 கோடி
நாட்டிலேயே அதிக வருவாய் உள்ள மாநில கட்சி பட்டியலில் 2-வது இடத்தில் அதிமுக இடம் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு ஆண்டுக்கு ரூ54.938 கோடி வருவாய் கிடைக்கிறது. தெலுங்குதேசம் கட்சிக்கு ஆண்டுக்கு ரூ15.978 கோடி வருவாய் கிடைக்கிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
திமுகவின் அறிக்கை
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்களது கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை விபரங்களை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தன. அதன்படி, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, 259 பேரிடமிருந்து 112 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக திமுக அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக 2013 -14ம் ஆண்டுகளில் மட்டும் திமுகவிற்கு 79 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலானதாகக் கூறப்பட்டுள்ளது.
நன்கொடை விபரங்கள்
20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், தேர்தல் ஆணையத்திடம் விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி, தமிழக அரசியல் கட்சிகள் இந்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தன.
நன்கொடை குறைந்தது
இந்த ஆண்டுகளில் 4 கோடியே 17 லட்ச ரூபாய் மட்டுமே நன்கொடையாக பெற்றதாக தெரிவித்துள்ளது. இதில் அண்ணா தொழிற்சங்க பேரவையும், சென்னை மேயர் சைதை துரைசாமியும் அதிகப்படியான நன்கொடை அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆதாரங்கள் என்ன?
அரசியல் கட்சிகளால் பெறப்படும் நன்கொடையில் 71.28% நிதி அறியப்பட முடியாத ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவையாகும் என்று அந்த அமைப்பு தன் ஆய்வில் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அனாமதேய நிதி ஆதாரங்களில் இருந்து தேசிய கட்சிகள் பெறும் நன்கொடை 313 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மாநிலக் கட்சிகளின் நன்கொடை அளவு 652% அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.