நாட்டுமாடுகளை அழிக்க பீட்டா சதி.. ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டு
நாட்டுமாடுகளை அழிக்க பீட்டா அமைப்பு சதி செய்வதாக ராஜ்ய சபாவில் திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
டெல்லி: ராஜ்ய சபாவில் மிருகவதை தடுப்பு சட்டம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இதில் திமுக எம்பி திருச்சி சிவா ஜல்லிக்கட்டுப் பற்றியும் காளைகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.
ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா பேசியதாவது: இயற்கை முறை விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் கால்நடைகளை காக்க வேண்டியது மிக அவசியம்.
விவசாயத்தில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். அதே போல விவசாய இயந்திரங்களால் கால்நடைகளும் கூட தேவையற்றதாக ஆகி வருகின்றன.

பீட்டா சதி
தமிழ்நாட்டில் விவசாய பணிகளுக்காகவே காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. காளைகள் பயன்படுத்தப்படுவதை பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்புதான் எதிர்த்து வருகிறது. இதன் மூலம் இந்திய கால்நடை இனங்களை அழிப்பதன் மூலம் வெளிநாட்டு கால்நடைகளை புகுத்த பீட்டா சதித்திட்டம் தீட்டி வருகிறது.

காட்சி விலங்கு
காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்க்கக் கூடாது. அப்படி சேர்க்கப்பட்டது ஏன்? வீட்டு விலங்காக மாற்றப்பட்டுவிட்ட காளைகளை காட்சி விலங்கு பட்டியலில் சேர்த்திருப்பது தவறு. ஜல்லிக்கட்டு நடத்துவது கால்நடைகளை இனவிருத்தி செய்வதற்குத்தானே ஒழிய அவற்றை சித்ரவதை செய்வதற்கு அல்ல என்று கூறினார்.

கோர்ட்டில் தடை
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில் அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இதனை எதிர்த்து பீட்டா அமைப்பு மனு ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்து தடை உத்தரவைப் பெற்றது.

மாணவர் புரட்சி
இதனையடுத்து, தமிழ்நாட்டில் எழுந்த மாணவர் புரட்சியால் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொங்கல் முடிந்த பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications