மத்திய அமைச்சக ஆவண திருட்டில் ரூ.10,000 கோடி பண பேரம்: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
டெல்லி: மத்திய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டதில் ரூ.10 ஆயிரம் கோடி பண பேரம் நடந்ததாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பத்திரிக்கையாளர் சாந்தனு சாய்கியா தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் பத்திரிக்கையாளர் சாந்தனு சாய்கியா, 5 தனியார் நிறுவன அதிகாரிகள் உள்பட 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
பெட்ரோலியத் துறை தவிர்த்து நிலக்கரி மற்றும் மின்சாரத் துறை அமைச்சக ஆவணங்களும் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியன் பெட்ரோ குழும தலைவரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான சாந்தனு சாய்கியாவை வரும் 23ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் சாய்கியா கூறுகையில்,
மத்திய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டு விற்கப்பட்டதில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் இந்த ஆவண திருட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எதிர்கட்சிகள் இது குறித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.