சீனாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சீறிய ஜேட்லி!
நாட்டை பாதுகாக்க இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வல்லமை படைத்துள்ளது என்று ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லி: 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரில் பாடம் கற்றுக் கொண்டதால் எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமையை இந்திய ராணுவம் பெற்றுள்ளது.
இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
இரு நாட்டின் தூதரக அதிகாரிகளும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்திய வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சீனா கொக்கரித்து வருகிறது. அது போதாக்குறைக்கு 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் போரிட்ட இந்தியாவுக்கு ஏற்பட்ட விளைவுகளை நினைத்து பாருங்கள் என்று சீன ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தியா வல்லமை
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து ராஜ்யசபாவில் அருண் ஜேட்லி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா எத்தனையோ சோதனை சந்தித்துவிட்டது. ஆயினும் எந்த சவாலையும் சந்திக்கும் விதத்தில் இந்தியா வல்லமை படைத்துள்ளதை பெருமையாக கூறமுடியும்.
வலிமை வாய்ந்தது
அண்டைய மாநிலங்களிலிருந்து இந்தியா தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் இந்திய ராணுவத்தினரும் தங்கள் திறமையை தாங்களாகவே வளர்த்து கொண்டனர்.1962-ஆம் ஆண்டு நடந்த போரைக் காட்டிலும் கடந்த 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர்களில் இந்தியா மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழ்ந்து வெற்றி பெற்றது.
காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டும்
கடந்த 1948-இல் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீண்டும் மீட்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரின் விருப்பமாகும். நமக்கென்று சவால்கள் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நமது நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் சிலர் குறி வைக்கின்றனர்.
எந்த தியாகத்தையும்
சவால்கள் கிழக்கு எல்லையில் இருந்து வந்தாலும் சரி, மேற்கு எல்லையில் இருந்து வந்தாலும் சரி நமது வீரர்கள் நமது நாட்டை பாதுகாப்பர் என்று முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்ய ராணுவத்தினர் தயாராக உள்ளனர்.
பாடங்களை கற்றுக் கொண்டோம்
1962-ஆம் ஆண்டு போரில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டுவிட்டோம். ஆகையால் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவத்தினர் திறமையாக உள்ளனர். பயங்கரவாதத்தால் ராஜீவ் காந்தியும், இந்திரா காந்தியும் உயிர் இழந்துள்ளனர்.
குரல் கொடுக்க வேண்டும்
அண்டை நாட்டிலிருந்து ஊடுருபுவவர்களும், நாட்டில் உள்ளவர்களும் பயங்கரவாதத்தை பரப்ப முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.